சீதுவ சோதனைச்சாவடியில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி இயங்கியதில் ஒருவர் உயிரிழப்பு!
சீதுவ – கொட்டுகொட பிரதேசத்தில் இன்று(08) அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி இயங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீதுவயிலிருந்து கொட்டுகொட நோக்கி பயணித்த காரை கொட்டுகொட பொலிஸ் சோதனைச்சாவடிக்கருகில் சோதனைக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில், காரிலிருந்த நபர்கள் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்ட போதே துப்பாக்கி இயங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்த நபரொருவர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
பூகொடையை சேர்ந்த 38 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காரில் பயணித்த ஏனைய மூவரும் தப்பிச்சென்றுள்ளதுடன், அவர்களைத் தேடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.