உள்நாடு

பல்கலை பேருந்து விபத்தை ஏற்படுத்திய சாரதி குறித்து வெளியான தகவல்கள்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) தெற்கு வளாகத்தின் மாணவர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் பதுளையில் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில், இருவர் உயிரிழந்திருந்ததுடன், 40 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி குறித்த தகவல்கள் நீதிமன்றத்தில் இன்று தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சாரதி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைதுசெய்யப்பட்டு அவரது ஓட்டுநர் உரிமம் 05 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், நீதிமன்ற அபராதமும் செலுத்தியிருந்தார்.

அக்மீமன பொலிஸ் எல்லைக்குட்பட்ட காலி லபுதுவ பிரதேசத்தில் அவர் ஓட்டிச் சென்ற பஸ் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி விபத்து ஏற்படுத்தியதன் பின்னர் ஆகஸ்ட் 04 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சந்தேகநபர் தன்னுடைய சாரதி அனுமதிப்பத்திரம் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தமையை மறைத்து, காணாமல் போய்விட்டதாக பொய்யாக ஹினிதும பொலிஸில் முறைப்பாடு செய்து மாற்று சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு நாள் சேவை மூலமாக பெற்றுள்ளார்.

இந்த தகவலை கருத்திற்கொண்ட காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே, தற்போது சந்தேகநபர் வசம் உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை தடுத்து வைத்து நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) தெற்கு வளாக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து வீதியின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவிகள் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்திருந்தனர்.

விபத்து ஏற்படுவதற்கு முன் குறித்த பேருந்து வேகமாகச் சென்றதைக் காட்டும் காரொன்றிலிருந்து எடுக்கப்பட்ட காணொளி (டாஷ் கேம்) காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *