தீமையைச் சுட்டெரிக்கும் ரமழான்
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் நோன்பு நான்காவது கடமையாகும்.‘ரமழான்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘சுட்டெரித்தல்’ என்பது பொருளாகும். ரமழான் மாதம் தீமைகளைச் சுட்டெரித்து மக்களை நன்மையின்பால் கொண்டுசேர்க்கும் மாதமாகவும் அமைகிறது. புனித அல்குர்ஆன் அருளப்பட்ட இம்மாதம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளை செயல் வடிவில் முஸ்லிம் மக்கள் முனைப்போடு கடைப்பிடிப்பதால் அகத்தில் முளைவிடும் தீய உணர்வுகளை, புறத்தே சூழ்ந்துவரும் தீமைகளை ஒருங்கே எதிர்த்துப் போராடி, அவற்றை முற்றாகச் சுட்டெரித்து வெற்றிகொள்ளும் மாதமாக அமைகிறது.
“ரமழான் மாதம் எத்தகைய மகத்துவமுடையதென்றால், அதில்தான், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேரான வழியைத் தெளிவாக்கக்கூடியதாகவும் நன்மை தீமையைப் பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் (என்னும் இவ்வேதம்) அருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் இம்மாதத்தை அடைகிறாரோ அவர் இம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும் (2:185).
எனவே, ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமையாகும்.
சமயந்தோறும் விரதமெனும் நோன்பு
உலகிலுள்ள அனைத்துப் பெரும் சமயங்களும் விரதமாகிய நோன்பைக் கடமையாக்கியுள்ளன. இந்து சமயம் அடிக்கடி விரதமிருக்கப் பணிக்கிறது. எனினும், இஸ்லாமிய நோன்புக்கும் பிற சமய விரதங்களுக்குமிடையே வேறுபாடு உண்டு. ஏனைய சமயங்கள் விதித்துள்ள விரதங்கள் ஒருசில நாட்கள் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகின்றன. அவ்விரதங்களின்போது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் வரை உணவு உண்ணாமலோ அல்லது குறிப்பிட்ட உணவு வகைகளை உண்ணாது விலக்கியோ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நீர் பருகத் தடையேதும் இல்லை.
நோன்பு விதிவிலக்கும் சலுகையும்
ரமழான் நோன்பு நோற்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் இன்றியமையாக் கடமையாயினும் ஒருசிலருக்கு விதி விலக்கும் சலுகைகளும் உண்டு.
கடுமையான நோய்வாய்ப்பட்ட வர்கள், மூப்பின் எல்லையைத் தொடும் முதியவர்கள், குழந்தை களுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பு நோற்பதினின்றும் விலக்குப் பெறுகிறார்கள்.
சாதாரண நிலையில் உடல் நலமில்லாதவர்களும் பயணிகளும் தவிர்க்க முடியாத காரணங்களால் ஓரிரு நாட்கள் நோன்பு நோற்க இயலாதவர்களும் நோன்பு நோற்காதிருக்க அனுமதி உண்டு. இவர்கள் விடுபட்ட நாட்களைப் பின்னர் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டும். முப்பது நாட்கள் நோன்பு நோற்று முழுமைப்படுத்த வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமையாகும்.
“நோன்பு காலத்தில் யாராவது நோயாளியாகவோ அல்லது யாத்திரை யிலோ இருந்தால் (ரமழான் அல்லாத) ஏனைய நாட்களில் (விட்டுப்போன நாட்களின் நோன்பைக் கணக்கிட்டு) நோற்று விடவும்” (2:185) என அல்குர்ஆன் கூறுகிறது.
யாருக்காக நோன்பு?
நோன்பு வைக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனுக்காக நோன்பு நோற்பதாக உறுதிகொள்கிறான். நாம் நோற்கும் நோன்பால் இறைவனுக்கு எவ்விதப் பயனும் ஏற்படப்போவதில்லை. மனிதர்களின் உதவியை இறைவன் நாட வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் கொடுப்பவனே தவிர, பெறுபவன் அல்ல.
அப்படியென்றால், நோன்புக் கடமையை நிறைவேற்றுவதால் நிலையான பயன் பெறுபவர் யார்? நாம்தான். இறைவன் பெயரால் விளையும் நன்மை அனைத்தும் நமக்கே உண்டாகின்றன. தீமையினின்றும் முற்றாக விலகவும் நன்மையை நாடவும் பொறுமை, அன்பு, கருணை ஆகியவற்றின் வடிவாக மாறவும் நமக்கு வாய்ப்பளிக்கின்றது.
இத்தகைய நற்பண்புகளால் சூழப்பட்டு மனத்தூய்மை பெற்ற நம்மையே இறைவன் நேசிக்கிறான். அல்லாஹ்வின் அன்பைப்பெறும் தகுதியை ரமழான் மாத நோன்பு நமக்கு எளிதாகத் தேடித் தருகிறது. இவ்வாறு இறைவன் பெயரால் நோற்கும் நோன்புப் பலன் முழுமையும் நம்மையே சேர்கின்றன. இதையே இறைவன் தன் திருமறையில்,
“நீங்கள் நோன்பு நோற்பது உங்களுக்கே நன்மை என்பதை (நீங்கள் அறிவுடையோர் களாயிருந்தால்) தெரிந்து கொள்வீர்கள்” (2:184) எனக் கூறித் தெளிவுபடுத்துகிறான்.
நோன்பு தரும் இறை நெருக்கம்
இறையருளைத் தேடித் தருவது மட்டுமல்லாது இறைவனோடு நம்மை நெருக்கமடையச் செய்யும் சாதனமாகவும் நோன்பு அமைந்துள்ளது. நமக்கு மட்டுமல்ல, இறைத் தூதர்களுக்கும்கூட நோன்பு இறை நெருக்கத்துக்கான படிக்கட்டுகளாக அமைந்துள்ளன.
இம்மைக்கும் மறுமைக்கும் பெரும் பேற்றை நல்கவல்ல ஆற்றல்மிகு சாதனமாக அமைந்திருப்பது நோன்பாகும். இதைப்பற்றி திருமறை, விசுவாசிகளே, உங்களுக்கு முன்னிருந் தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தவாறே உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் பரிசுத்தமுடையவர் களாகலாம் (2:183) எனக் கூறுகிறது.
தனக்குத்தானே தடை
நோன்பு காலத்தில் நோன்பாளி நோன்பு வைக்கும்போதும் முடிக்கும்போதும் வேண்டுமானால் பலரோடு இருக்கும் வாய்ப்பைப் பெறலாம். பிற சமயங்களில் தனியாக இருக்கும் வாய்ப்பே மிகுதி. அத் தனிமைச் சந்தர்ப்பங்களில் யாருக்கும் தெரியாமல் சிறிதளவு உண்ணவோ சிறிது நீர் பருகவோ முடியும். ஆனால், நோன்பாளி அத்தகைய சிந்தனை அறவே இல்லாதவனாக, கடுமையான மனக்கட்டுப்பாட்டுடன் நோன்பு நோற்கிறான்.
இதற்குக் காரணம் நோன்பாளி மனிதர் பார்வையிலிருந்து மறைவாக இருந்தபோதிலும் இறைவனின் நேரடிப்பார்வை எப்போதும் தன்மீது படிந்திருப்பதாகக் கருதும் மனநிலையும் நம்பிக்கையும் கடமை உணர்வும் இறையச் சமுமேயாகும். இதனால் ஒவ்வொரு நோன்பாளியும் மிகுந்த மனக்கட்டுப்பாட்டுடன் தனக்குத் தானே தடை விதித்துக்கொண்டு நோன்புக் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி மகிழ்கிறார்.
பொறுமையின் உறைவிடம் நோன்பு
மனக் கட்டுப்பாட்டுடன் அளவுக்கு அதிகமான பொறுமையைப் பெறும் பயிற்சிக்களமாகவும் நோன்பு அமைகிறது.
ரமழான் மாதம் முழுமையும் நோன்பு நோற்கும் ஒருவர் பசியை மட்டுமா பொறுக்கிறார். தன் தவறான பழக்க வழக்கங்கள் அத்தனையினின்றும் விடுபட்டவராக, தனக்கேற்படும் வசதிக் குறைவுகளையெல்லாம் பொறுத்து, நல்லுணர்வு, நற்சிந்தனை, நல்லிணக்கம் ஆகிய பண்பு நலன்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலம் எல்லா வகையிலும் பொறுமையின் உறைவிடமாகிறார்.
நோன்பாளி வழக்கமாக உண்ணும் பருகும் நேரங்கள் முற்றாக மாறுவதால் அவர் எவ்வித மன எரிச்சலுக்கும் ஆளாவதில்லை. தான் இன்பமாக உறங்கி மகிழும் முன்னிரவிலும் பின்னிரவு வைகறையிலும் விழித்திருக்க நேர்வதற்காக அவர் வருந்துவதில்லை. அவற்றையெல்லாம் அவர் அளவுக்கு அதிகமான பொறுமையோடும் சகிப்புணர்வோடும் மேற்கொள்கிறார். தான் ஒரு பொறுமைமிக்க இறையடியான் என்ற நல்லுணர்வு அவன் நெஞ்சமெல்லாம் பரவி அவரைப் பரவசப்படுத்துகிறது.
புலனடக்கத் தோற்றுவாய் நோன்பு
மனிதனைத் தவறான போக்கில், தீயவழிகளில் இட்டுச்செல்வதில் ஐம்புலன்களுக்கு அதிகப் பங்குண்டு. ஐம்புலன்களை அடக்கியாள்வதென்பது அவ்வளவு எளிதான செயலன்று, இதனால்தான் அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி ஆள்பவன் அறிவுக்கு வித்துப் போன்றவன் என மொழிந்தார் வள்ளுவப்பெருந்தகை. அத்தகைய புலனடக்கத்தைத் தோற்று விக்கும் தோற்றுவாயாக நோன்பு அமைந்துள்ளது.
நோன்பின்போது எத்தகைய அறுசுவை உணவின் நறுமணமாயினும் அதனை நுகரும் வேட்கை நோன்பாளிக்கு இல்லாதுபோகிறது. மூக்குப் பொடி போன்றவற்றை மூக்கினுள் திணித்து மூக்கு துவாரத்தையே நாசப்படுத்தும் தவறான பழக்கம் நோன்பின்போது முற்றாக விலக்கப்படுவதால் மூக்குப் புலனும் ஆட்கொள்ளப்படுகிறது.
நோன்பு காலத்தில் தீயன காண்பது கடுமையாகத் தடுக்கப்படுகிறது.
தன் பார்வையில் அன்பும் பரிவும் கருணையுமே இருக்குமாறு நோன்பாளி பார்த்துக்கொள்கிறான். ஈத்துவக்கும் மாதமாதலால் அனைவரிடமும் கனிவான பார்வையைச் செலுத்த வேண்டிய சூழ்நிலை அவனைச் சுற்றி உருவாகி விடுகிறது. இதன்மூலம் கட்புலனும் நோன்பாளியின் ஆளுகைக்குட்பட்டதாகிறது.
நோன்புச் சமயத்தில் ஆண்-பெண் உடலுறவு அறவே தடுக்கப்படுகிறது. பாலுணர்வு தலைதூக்கும் பார்வையோ படிப்போ அறவே கூடாதென தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களைத் தழுவுவது முற்றாக விலக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தவறான தொடுவுணர்வுக்கு வாய்ப்பே இல்லாமற் போவதால் தொடுவுணர்வுப் புலனும் நம் கட்டுப்பாட்டுக்குட்பட்டதாகிறது.
இவ்வாறு வாய், மூக்கு, கண், காது, தொடுவுணர்வு ஆகிய ஐந்து ஐம்புலன்களையும் தீமையின் சுவடுகூடப் படியாவண்ணம் நற்செயல்களின்பால் மட்டும் திருப்பி இறையருள் பெறும் பக்குவத்தை நோன்பாளி பெற வழியேற்படுகிறது. இதன் மூலம் ஐம்புலன்களின் இன்ப வேட்கை அறவே தடுக்கப்படுகிறது.
உடல்நோய் போக்கும் உன்னத நோன்பு
ஆன்மீக, உளவியல் அடிப்படையில் மட்டுமல்லாது, அறிவியல் அடிப்படை யிலும் நோன்பு பெரும் நன்மைகளை விளைவிப்பதாய் அமைந்துள்ளது.
நோன்பு முறையால் உடலில் வாட்டும் பல நோய்களின் வலிமை குறைகின்றன அல்லது குணமாகின்றன என்பது மருத்துவ உலகக் கணிப்பாகும்.
வைகறைக்கு முன்பு உண்ணும் உணவு சில மணிநேரத்துக்குள் நன்கு செரித்து விடுகிறது. இதன்மூலம் பல மணிநேரங்கள் செரிப்பதற்கு ஏதுமில்லா நிலையில் ஜீரண உறுப்புகளாகிய இரைப்பை, வயிறு, சிறுகுடல், பெருங்குடல் போன்றவை பூரண ஓய்வு பெறுகின்றன, சுத்தமடைகின்றன.
நோய் தோன்றவோ வளரவோ போதிய வாய்ப்பில்லா நிலை உருவாக இதன்மூலம் வழியேற்படுகிறது.
நோன்பின்போது நீரிழிவு போன்ற நோய்கள் கட்டுக்குள் அடங்கியிருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சாதாரண நாட்களில் அதிகளவில் உண்பதால் அளவுக்கதிகமாக உடலில் கொழுப்புப் பொருள் சேர உடல் பருத்துவிடுகிறது.
இதனால் உடலின் இயற்கையழகு குன்றுவதோடு பல்வேறு நோய்களுக்கும் இது வழியாய் அமைகிறது. இதன்மூலம், மாரடைப்பு போன்ற திடீர் மரணங்களும் சம்பவிக்கின்றன. நோன்பு காலத்தில் குறைவான உணவே உட்கொள்ளப்படுவதால் இக்கொழுப்புப் பொருட்கள் கொஞ்சங் கொஞ்சமாகக் கரைகின்றன. இதன் வாயிலாக உடல் எடையும் பருமனும் குறைய உடல் கலகலப் படைகிறது.
பசியின் கொடுமையை உணர்த்தும் நோன்பு
சமூகவியல் அடிப்படையில் நோக்கும்போது பசித்திருப்போர் எத்தகைய கொடுமை அனுபவிக்கின்றனர் என்பதை செயல்பூர்வமாக நோன்பாளியை உணரச் செய்கிறது. இதை உணரும் செல்வ வளமிக்க நோன்பாளிகள் இல்லாதோரின் பசித் துயர் நீக்க அவாவுகின்றனர். ஸகாத் கடமைகளை இனிது நிறைவேற்றி ஏழை எளியவர்களை மகிழ்விக்க வேட்கை கொள்கின்றனர். ஏழை எளியவர்களின் சிரிப்பிலே இறைவனைக் காண உண்மையிலே முயல்கின்றனர். இல்லாதோருக்காக தாங்கள் முயன்று தேடி பொருளை தியாகம் செய்ய முனைகின்றனர்.
இவ்வாறு, இறைவனின் கட்டளைகளை நிறைவேற்ற அவன் விதித்த வாழ்வியல் நெறிப்படி வாழ முனையும் முஸ்லிம் இறை வழியில் எவ்விதத் தியாகத்துக்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ள முயல்கிறார். தன் மன இச்சைகளையெல்லாம் தூக்கி எறிகிறார். தன் பழக்க வழக்கங்களையெல்லாம் முற்றாக மாற்றிக்கொள்கிறார். ஐம்புலன்களை அடக்கி ஆள்கிறார். பசியையும் தாகத்தையும் மகிழ்வோடு தாங்குகிறார். இம்முறையில் தன்னால் இயன்ற தியாகங்களை யெல்லாம் இறைவனுக்காக மகிழ்வோடு நிறைவேற்றுகிறார். இதற்கான ராஜபாட்டையாக அமைந்துள்ளது ரமழான் நோன்பு.
மனிதனை மாமனிதனாக, மாண்புடையவனாக, மனிதப் புனிதனாக உருமாற்றும் அருஞ்செயலை ரமழான் நோன்பு வெற்றிகரமாக நிறைவேற்றுகிறதெனில் அது மிகையன்று.