திருகோணமலையில் யானையுடன் மோதி விபத்து – ஒருவர் மரணம்
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா பகுதியில் யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (14) இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த முபாரக் நிப்ராஸ் (28 வயது) உயிரிழந்துள்ளதாகவும் அவரது சக நண்பரான வவுனியா நாகர் இலுப்பைகுளம் பகுதியைச் சேர்ந்த ஏ சயோதி (27 வயது) என்பவர் காயமடைந்த நிலையில் திருகோண மலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் உயிரிழந்த இளைஞனின் சடலம் திருகோணமலை பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் காணப்படுகின்ற குளிரூட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் பிரேதங்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சடலங்களை மூதூர் மற்றும் கந்தளாய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.