விளையாட்டு

இலங்கை அணிக்கு கிடைத்த எதிர்பாராத தோல்வி!

அயர்லாந்து மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையே நேற்று(18) நடைபெற்ற 2 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையில்,  அயர்லாந்து அணி 2 – 0 என்ற நிலையில் தொடரை கைப்பற்றியுள்ளது.

துடுப்பாட்டத்தில் அமி ஹன்டர், லீ போல், ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து அயர்லாந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி சார்பாக ஹர்ஷித்தா சமரவிக்ரம கன்னிச் சதம் அடித்தார்.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அச்சினி குலசூரிய 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் கவிஷா டில்ஹாரியும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அயர்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஆலீன் கெலி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேன் மெகயர் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *