ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடம்மாறிய உலகக்கிண்ணம்!
இந்த ஆண்டு பங்களாதேஷில் நடைபெறவிந்த ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை பங்களாதேஷில் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் அசாதாரண நிலைமைகள் குறிப்பிட்ட தொடர் அங்கே நடைபெறுவதில் சிக்கல்களை தோற்றுவித்திருந்தது.
எனவே குறிப்பிட்ட தொடரினை வேறு நாடு ஒன்றில் நடாத்த ஐ.சி.சி திட்டமிட்டு அதற்காக இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியமாகிய நாடுகள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறிப்பிட்ட உலகக் கிண்ணத் தொடரினை இந்தியா நடாத்த அந்த நாட்டு கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் அது வெற்றிகரமாக நிறைவடையாது போனது.
இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சித்தில் டுபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளது.