விளையாட்டு

தொடரை இழந்த இலங்கைக்கு வெற்றி கிடைக்குமா? இறுதி டெஸ்ட் இன்று ஆரம்பம்.

தனஞ்ஜய டி சில்வா தலைமையிலான சுற்றுலா இலங்கை அணிக்கும், ஒல்லி போப் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு லண்டனில் அமைந்துள்ள த ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

இங்கிலாந்துக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. கடந்த 21ஆம் திகதி மென்செஸ்டரில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களினால் வெற்றியீட்டியது. 
இரண்டாவது போட்டி கடந்த 29ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி 190 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் மூன்றாவதும், இறுதியுமான ஆட்டம் இன்று ஆரம்பமாகிறது. 

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இதுவரையில் 38 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இலங்கை அணி வெறும் 8 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது. 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

இரு அணிகளுக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி 8 ஆட்டங்களிலும் வரிசையாக தோல்வியை சந்தித்துள்ளது. இலங்கை அணி இறுதியாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் வெற்றியீட்டிய பின்னர் 10 ஆட்டங்களில் ஒரு சமநிலையுடன் 9 தோல்விகளை சந்தித்துள்ளது. அதன் படி இலங்கை அணி கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்துடன் டெஸ்ட் வெற்றியை சுவைக்கவில்லை.

எனவே இன்று ஆரம்பமாகும் போட்டியை இலங்கை அணி வென்று 10 ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்வதுடன், இந்த டெஸ்ட் தொடரில் ஆறுதல் வெற்றிபெறுமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *