கடல் நீருக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து உலக சாதனை படைத்த ஜேர்மனி நாட்டவர்
ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த நபர் 120 நாட்கள் கடல் நீருக்கடியில் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஜேர்மனியைச் சேர்ந்த ருடிகர் கோச் (வயது 59) எனும் விண்வெளி பொறியியலாளர் ஒருவர் கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட 320 சதுரடி அளவிலான நீர் புகாத தங்குமிடத்தில் வாழ்ந்து உலக சாதனை படைத்து கின்ன்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
பனாமா கடல்பகுதியில் 36 அடி ஆழத்தில் உருவாக்கப்பட்ட அந்த தங்குமிடத்தை விட்டு வெளியே வராமல் தொடர்ந்து 120 நாட்கள் அவர் தங்கியுள்ளார்.
அவரது இந்த சாதனைக்காக கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்ட தங்குமிடம் ஓர் மிகப்பெரிய குழாயின் வழியாக கடலுக்கு வெளியே இருக்கும் மற்றொரு அறையோடு இணைக்கும்படி உருவாக்கப்பட்டது. அந்த குழாயினுள் சுழலும் வடிவிலான படிகள் அந்த தங்குமிடத்தினுள் சென்றடையும்.
கடல் நீருக்கடியில் 120 நாட்களைக் கழித்த அவர், கின்னஸ் சாதனை தீர்ப்பாளர் சூஸனா ரெயிஸ் முன்னிலையில் நேற்று (24) வெளியே வந்தார். இதற்கு முன்னர் 100 நாட்கள் நீருக்கடியில் இருந்து சாதனை படைத்த அமெரிக்காவின் ஜோசப் டிடூரியின் சாதனையை இவர் முறியடித்துவிட்டதாக சூஸனா ரெயிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கடலை விட்டு வெளியே வந்த ருடிகர் கோச் இந்த சாதனையின் மூலம் கடல்கள் மனிதகுலம் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற வகையிலான சுற்றுச்சூழலுடனுள்ளது என்று நிருபிக்க முயற்சித்துள்ளதாக கூறியுள்ளார்.