உக்ரைனுக்கு உதவ பிரான்ஸ் – பிரித்தானியா தயார்
ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் அமைதிப் பேச்சு நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பின்றி அமைதிப் பேச்சு மேற்கொள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும் தயாராகி வருகின்றன. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஐரோப்பிய நாடுகளை அழைக்காதது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் மற்றும் பிரித்தானிய பிரதமர் கேர் ஸ்டாமர் உள்ளிட்டோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரித்தானிய பிரதமர் கேர் ஸ்டாமர் கூறியதாவது:
உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு என்பது, ஐரோப்பாவின் பாதுகாப்பை போன்றது.உக்ரைனில் அமைதியை நிலை நிறுத்த, தேவைப்படும் பட்சத்தில் எங்கள் நாட்டுப் படைகளை அங்கு களம் இறக்கத் தயாராக இருக்கிறோம்.
ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் படைகளும் அங்கு களம் இறக்கப் படும் பட்சத்தில், மீண்டும் ஒருமுறை உக்ரைனை தாக்குவதற்கு புடின் தயங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.