மாநில அரசின் கேளிக்கை வரி இரத்துசெய்யப்பட வேண்டும் – நடிகர் கமல்ஹாசன்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று (21) இந்திய வர்த்தக மற்றும் தொழிற்றுறை கூட்டமைப்பு (ஃபிக்கி) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத் துறை மாநாடு சென்னை கிண்டியிலுள்ள ஹோட்டலொன்றில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
இதன்போது கமல்ஹாசன், ‘‘தொழிற்றுறையினரின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கிற – அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்கிற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறதென்பதால், இந்த மேடையைப் பயன்படுத்திக்கொண்டு திரையுலகு சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கிறேன். மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் திரைத்துறை அல்லல்படுகிறது. இத்துடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேரும்போது இரட்டை வரிவிதிப்பாகி விடுகிறது. மாநில அரசின் கேளிக்கை வரி இரத்துசெய்யப்பட்டால், பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவரும் தமிழ்த் திரையுலகுக்கு நிவாரணமாக அமையும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இந்தக் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று பரிசீலனை செய்வதாகக் குறிப்பிட்டார்.
பையனூரில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் திரைக் கலைஞர்களுக்கான குடியிருப்பு அமையவிருப்பதற்கான தமிழ்நாடு அரசின் அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகளுக்காக தமிழ்த் திரையுலகம் சார்பாக கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.