உக்ரைனிலிருந்து ரஷ்ய படை வெளியேற வேண்டும் : ஐ.நா தீர்மானம்
உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை உடனடியாகத் திரும்ப பெற வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், தங்கள் முயற்சிகளை மறு ஆய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில், 27 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பங்கேற்கும் அவசர மாநாட்டை, மார்ச் 6இல் நடத்த உள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி , ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதற்றத்தைக் குறைக்கவும், போர் நடவடிக்கைகளை முன்கூட்டியே நிறுத்தவும், உக்ரைனுக்கு எதிரான போரை அமைதியான முறையில் தீர்க்கவும் இந்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு 93 நாடுகள் ஆதரவாகவும், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு காரணமாக குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா உட்பட 63 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.