முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்க வேண்டும் – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கோரிக்கை!
முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மானிப்பாய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்குமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளமானது வலய கல்வி அலுவலகம் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையான 6 ஆயிரம் ரூபாவாக மட்டுமே காணப்படுகின்றது.
அதுவும் கூட 2013 வடக்குமாகாண சபை அமைந்தபின் அப்போதைய வடக்குமாகாண சபை உறுப்பினராக இருந்த பா. கஜதீபன், போன்றோரின் முயற்சியாலும் அப்போதைய வடக்குமாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜாவின் ஒப்புதலாலுமே இது கூட சாத்தியப்பட்டது.
அதே நேரம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடத்தப்படும் முன்பள்ளிகளின் ஆசிரியர் ஒருவருக்கு 30,000 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை நிரந்தர சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனை வடக்குமாகாண சபையின் கீழ் எடுக்க நடவடிக்கைக்கும் எடுத்தபோதும் அது சாத்தியப்படவில்லை.
இன்றும் முழுமையாக பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இது நடைமுறையிலுள்ள அதே நேரம் 2018இன் பின்னர் வடக்குமாகாண சபை பதவி நிறைவிற்கு பின் வடக்குமாகாண உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றால் நடாத்தப்படும் முன்பள்ளிகளில் நிரந்தர நியமனமுள்ள போட்டி பரீட்சை மூலம் நியமனம் செய்யப்பட்ட இடமாற்ற விதிகளுக்கு உட்பட கூடிய முன்பள்ளி ஆசிரியர்களும் 30,000 ரூபாக்கு உட்பட்ட சம்பளத்துடன் வடக்குமாகாண சபையால் நியமனம் செய்யப்பட்டுள்ளபோதும் பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள் வெறும் 6000 ரூபாய் உதவித்தொகை மட்டுமே வாழ்வாதாரமாக பெறுகின்ற இடரான பொருளாதார நிலையிலேயே கடமையாற்றி வருகின்றனார். இது மிகவும் பாதிப்பான நிலையாகும் என்பதோடு முன்பள்ளி ஆசிரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும், மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பலத்த எதிர்பார்ப்புக்களோடு வடக்கு மாகாண தமிழ் மக்கள் வாக்களித்து 05 ஆசனங்களை வழங்கியுள்ள சூழலில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாகவுள்ள வடக்குமாகாண ஆளுநர் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தி தற்போதைய பிரதமரே கல்வி அமைச்சராகவும் உள்ள காரணத்தினால் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்வதன் மூலம் வடக்கு மாகாணத்திலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து முன்பள்ளிகள் உட்பட அனைத்து விதமான முன்பள்ளிகளையும் வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் முன்பள்ளிகளாக உள்வாங்கிட நடவடிக்கை எடுத்து அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்துடன் கூடிய நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கும், சம்பள அதிகரிப்பினை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவும் குறிப்பிட்டுள்ளார்.