119 கோடிக்கு ஏலம்போன இந்தியரின் ஓவியம்
மகாராஷ்டிராவின் பண்டர்பூரை சேர்ந்த எம்.எப்.ஹூசைன் என்ற பிரபல இந்திய ஓவியரின் ஓவியங்கள் 119 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் பிகாசோ என போற்றப்படும் அவர் தனது வாழ்நாளில் சுமார் 60,000க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். அவரது சில ஓவியங்கள் மட்டும் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளன.
கடந்த 1954ஆம் ஆண்டில் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு எம்.எப்.ஹூசைன் வரைந்த ஓவியங்கள் டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. உலக சுகாதார அமைப்பு சார்பில் டெல்லியில் பணியாற்றிய நார்வே நாட்டை சேர்ந்த மருத்துவர் லியான் கடந்த 1954ஆம் ஆண்டில் ஹூசைனின் ஓவியங்களை 1,400 ரூபாவுக்கு வாங்கியுள்ளார். பின்னர் நோர்வே நாட்டுக்கு திரும்பிய லியான், ஓஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஓவியங்களை தானமாக வழங்கியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்துக்கு எம்.எப்.ஹூசைனின் ஓவியங்கள் கிடைத்தன. இந்த ஓவியங்கள் நேற்று முன்தினம் ஏலத்தில் விடப்பட்டன. அப்போது ரூபாய் 119 கோடிக்கு எம்.எப்.ஹூசைனின் ஓவியங்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டன.
கடந்த 2023ஆம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இந்திய பெண் ஓவியரான அமிர்தா ஷெர் கில் வரைந்த ஓவியம் ரூபாய் 61.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த சாதனையை எம்.எப்.ஹூசைனின் ஓவியங்கள் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.