உலகின் அனைத்து நாடுகளுக்கும் பாரபட்சமின்றி இறக்குமதி வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு
அனைத்து உலக நாடுகளின் பொருட்கள் மீதான இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், தங்கள் நாட்டின் பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இறக்குமதியாகும் பிற நாடுகளின் பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட நாடுகள் விதிக்கும் அதே அளவுக்கு (பரஸ்பர வரி) நாளை ஏப்ரல் 2-ம் திகதி முதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, இது தொடர்பாக உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இதனிடையே, ட்ரம்பின் கூடுதல் வரி விதிப்பால் நியாயமற்ற வகையில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் 10 முதல் 15 நாடுகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “அனைத்து உலக நாடுகளின் பொருட்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றார்.
பரஸ்பர வரி விதிக்கப்படும் நாளான ஏப்ரல் 2 அமெரிக்காவுக்கு விடுதலை நாள் என ட்ரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தார். அந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் வரிகளை சிறிதளவு குறைக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் ட்ரம்ப் கூறும்போது, “அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுடன் இனிமையாகவும் தாராளமாகவும் கனிவாகவும் இருப்பேன். பல தசாப்தங்களாக உலக நாடுகள் அமெரிக்காவிடம் காட்டிய தாராளத்தைவிட எங்கள் வரி விதிப்பு கனிவாக இருக்கும். வரலாற்றில் இதுவரை எந்த ஒரு நாடும் பாதிக்கப்படாத அளவுக்கு எங்கள் நாடு பாதிப்புக்குள்ளானது. ஆனால் உலக நாடுகளைப்போல் அல்லாமல் மற்ற நாடுகள் மீது இனிமையாக நடந்து கொள்வோம். இந்த நடவடிக்கையால் எங்கள் நாட்டுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்” என்றார்.
இதுகுறித்து அமெரிக்க வர்த்தக துறை உயர் அதிகாரி பீட்டர் நவரோ கூறும்போது, “உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி மூலம் ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். இதில் வாகன இறக்குமதி மூலம் மட்டும் 100 பில்லியன் டொலர் கிடைக்கும்” என்றார்.