4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் தலைவர் போப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் விருத்திமான் சஹா 1 ஓட்டத்துடனும், சுப்மன் கில் 2 ஓட்டங்களிலும், சாய் சுதர்சன் 6 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கை கோர்த்த ஷாருக்கான் – மில்லர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருவரும் இணைந்து 56 ஓட்டங்கள் பெற்ற நிலையில் மில்லர் 30 ஓட்டங்களிலும், ஷாருக்கான் 37 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய திவேட்டியா அதிரடியாக விளையாடினார். இதனிடையே ரஷித் கான் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய திவேட்டியா 21 பந்துகளில் 35 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
குஜராத் 19.3 ஓவர்களில் 147 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாருக்கான் 37 ஓட்டங்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக சிராஜ், யாஷ் தயாள், வைஷாக் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 148 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டு பிளெசிஸ், அதிரடியில் மிரட்டினார். 18 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். விராட் கோலி நிதானமாக விளையாடினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 92 ஓட்டங்கள் சேர்த்தது.
டு பிளெசிஸ் 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வில் ஜேக்ஸ் (1), படிதார் (2), மேக்ஸ்வெல் (4), கிரீன் (1) அடுத்தடுத்து நடையை கட்டினர். சிறிது நேரத்தில் கோலியும் (42) வெளியேற 117 ஓட்டங்களில் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
எனினும் கார்த்திக் மற்றும் ஸ்வப்னில் சிங் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இறுதியில் பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.