உலகம்

மாலைதீவு பாராளுமன்றத் தேர்தல் ; மீண்டும் ஆட்சியை பிடித்த முய்சு

மாலைதீவின் 20ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நேற்று(21) அங்குள்ள 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஜனாதிபதி முகமது முய்சுவின் செயல்பாடுகளால் அண்டை நாடான இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிரூபிப்பதற்கான முக்கிய சோதனையாக பார்க்கப்பட்டது.

தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இதில், ஜனாதிபதி முகம்மது முய்சுவின் கட்சி அதிகப்படியான இடங்களில் வென்றது.

கிட்டதட்ட 66 இடங்களை முய்சு கட்சி வென்றுள்ளது. இது பாராளுமன்றத்தில் 3இல் 2 பங்காகும். இந்த வெற்றியைத் தொடர்ந்து முய்சு தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு முய்சுவின் பிஎன்சி கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்தே வெறும் 8 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் அவரால் விரும்பிய சட்டங்களை எளிதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது.

முகம்மது முய்சு, எதாவது சட்டத்தைக் கொண்டு வர முயன்றால் அதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருந்த பெரும்பான்மை பலத்தை வைத்து முறியடித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று(21) நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், முகம்மது முய்சுவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதனால், முகம்மது முய்சுவால் நினைத்த சட்டங்களை நிறைவேற்றுவதில் பெரிய அளவில் எதுவும் சிக்கல் ஏற்படாதென தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *