கேரள கஞ்சாவை கட்டிலின் கீழ் பதுக்கி வைத்திருந்தவர் கைது
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவை சூட்சுமமாக கட்டிலின் கீழ் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை நேற்று (10) மாலை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, கடந்த புதன்கிழமை (5) இரு சந்தேக நபர்கள் பெருந்தொகையான கேரள கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு சந்தர்ப்பங்களில் கைதுசெய்திருந்தனர்.
5 நாட்களாக தடுப்புகாவலில் வைக்கப்பட்ட மேற்படி இரு சந்தேக நபர்களிடம் விசேட புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம் நேற்று குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இத்தேடுதலில் 33 வயதுடைய ஒராபி பாஸா வீதியை சேர்ந்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்துடன் 18 கிலோ 169 கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டதாக எமது செய்தியாளரிடம் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதான சந்தேக நபர் உட்பட 50 இலட்சத்திற்கும் பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் சான்றுப் பொருள்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ். ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.