2ம் கட்ட போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஹமாஸ்
இஸ்ரேல் – காஸாவுக்கிடையிலான முதல்கட்டப் போர் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீடிப்பது தொடா்பான பேச்சுவார்த்தையை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினா் அழைப்பு விடுத்துள்ளனா்.
அந்தவகையில் ஆறு வாரகால முதல்கட்ட போர்நிறுத்தம் நாளை (1) முடிவுக்கு வருகிறது. அதைத் தொடா்ந்து, எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் விடுவிப்பது, காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது ஆகிய அம்சங்கள் அடங்கிய இரண்டாவது கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைக்குத்தயார் என்று ஹமாஸ் அமைப்பினா் தற்போது அறிவித்துள்ளனா்.
இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் இரண்டாம்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். அத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும், அந்த ஒப்பந்தத்தை மீறாமல் செயல்படுவதும் மட்டுமே எஞ்சியுள்ள இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான வழியாகும்.
போர் நிறுத்தத்தில் இருந்து இஸ்ரேல் பின்வாங்கினால் அது பணயக் கைதிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரை மேலும் இன்னலுக்குள்ளாக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.